சோதனை என்ற பெயரில் மதுவிலக்கு போலீசார் கெடுபிடி: சுற்றுலா பயணிகள் வேதனை!!
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே கேர்மாளம் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள ‘செக் போஸ்ட்’ அருகே கோபி மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்துகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தின் எல்லையில் இருந்து வரும் தமிழர்களையும் சுற்றுலா பயணிகளையும் நிறுத்தி சோதனை நடத்துகிறார்கள்.
கர்நாடக மதுபாட்டில்களை வாங்கி வருபவர்களிடம் அதை வலுக்கட்டாயமாக பறித்து கொண்டு மிகவும் ‘கெடுபிடி’யாக நடந்து கொள்வதாக சுற்றுலா பயணிகள் புகார் கூறி உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் கூறும்போது,‘‘ ஒருவர் மட்டுமே (அதிகாரி) போலீஸ் உடையில் இருக்கிறார். மற்றவர்கள் சாதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் நிஜமாகவே போலீசாரா…? அல்லது அவரது நண்பர்களா…? என்று தெரியவில்லை. சுற்றுலா பயணிகளிடம் மது பாட்டில்களை பறித்து சாதாரண உடையில் இருப்பவர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் இந்த சரக்கு சூப்பராக உள்ளதே… என்று பாட்டிலை உடைத்து குடிக்கிறார்கள். கேட்டால் அநாகரீகமாக பேசி மனம் நோகும்படி நடந்து கொள்கிறார்கள்’’ என்று வேதனையுடன் கூறினர்.
மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கேஸ் போடட்டும், பரவாயில்லை. அது அவர்களின் கடமை. ஆனால் சுற்றுலா பயணிகளிடம்.. பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு மனம் நோகும்படி பேசுவது நியாயமா?’’ என்றும் கூறினர்.
Average Rating