பள்ளிக்கு சென்ற 9–ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்த வாலிபர்கள்!!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் யாமினி (வயது 14). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும் போதும், வரும்போதும் ஆத்தூர் பகுதியில் உள்ள முள்ளிவாடி, ரங்கன் தெருவை சேர்ந்த ராஜா மகன் பிரதாப் (வயது 18) மற்றும் அவரது நண்பரான மயில்சாமி மகன் முருகன் ஆகிய 2 பேரும் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் அதுபோல் யாமினி பள்ளிக்கு செல்லும் போதும், வரும்போதும் பிரதாப், முருகன் ஆகிய இருவரும் கேலி, கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த மாணவி யாமினி இச்சம்பவம் குறித்து தனது உறவினர்களிடம் கூறி அழுதார்.
உடனே இது குறித்து உறவினர் ஒருவர் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரதாப்பை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Average Rating