பெண்கள் பொது இடத்தில் சத்தமாக சிரிக்கக்கூடாது: துருக்கி அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!
இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்ட துருக்கியின் ஆளும்கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் இணை நிறுவனரும், அந்நாட்டின் துணை பிரதமருமான புலென்ட் அரின்க் சமீபகாலமாக தங்கள் மக்களிடையே தார்மீக சரிவைக் காண்பதாக கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார். கடந்த வாரம் பெண்கள் பொது இடங்களில் சத்தமாக சிரிக்கக்கூடாது என்று கூறிய இவரது கருத்து மத சார்பற்ற துருக்கியர்களால் பலமாக எதிர்க்கப்பட்டது. இதற்கான தங்களின் எதிர்ப்பைக் காட்டும்விதமாக பெண்கள் பலரும் வாய்விட்டு சிரிக்கும் தங்களின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக இன்று அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அரின்க் குறிப்பிட்டார். பொதுவான நெறிமுறைகள் பற்றியே தான் குறிப்பிட்டதாகவும் கூறிய அரின்க் விடுமுறை நாட்களில் கணவர்கள் இல்லாமல் பெண்கள் வெளியே போகின்றனர் என்றும், சில பெண்கள் சுய கட்டுப்பாடு இல்லாமல் கம்பங்களில் ஆடுகின்றனர் என்றும் தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் இப்படி வாழலாம். அவர்களிடத்தில் நான் கோபப்படமுடியாது. ஆனால் உங்களைப் பார்த்து நான் பரிதாபப்படத்தான் முடியும் என்று அவர் தனது பேட்டியில் கூறினார்.
துருக்கியின் பிரபல கால்பந்து வீரரான கநேர் எர்கினின் மனைவி இதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த நடனத்தின் மீதான தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். இந்த செய்கையைத் தொடர்ந்தே அரின்க் தனது கருத்தினை வெளியிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் இவரது பேட்டியைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்களின் செல்லப்பிராணிகள் கம்பத்தின் மீது நடனம் ஆடுவதுபோலும், கொடிகள் பறப்பதுபோலும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
துருக்கியின் தற்போதைய பிரதமர் ரெசெப் தையிப் எர்டோகன் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அங்கு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றார். ஏற்கனவே இவர் தனது விதிமுறைகளால் மதச் சார்பற்ற துருக்கியை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்படுத்துகின்றார் என்ற எண்ணம் காணப்படுகின்றது. இந்த நிலையில் துணைப் பிரதமரின் பெண்களுக்கு எதிரான இந்தக் கருத்துகள் மக்களிடையே அதிகப்படியான எதிர்ப்பைத் தூண்டும் என்ற கருத்தே அங்கு நிலவுகின்றது.
Average Rating