குடியாத்தம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை!!
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அம்சா (வயது 65). இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் இருந்தனர்.
ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் இறந்து விட்டனர். அம்சாவின் மூத்த மகள் கஸ்தூரி திருமணமாகி பெங்களூரில் வசிக்கிறார். 2வது மகள் அஞ்சலை செல்வ பெருமாள் நகரில் வசிக்கிறார். இதனால் அம்சா சாலையோரம் உள்ள குடிசையில் தங்கி அங்கு பெட்டிக்கடை மற்றும் இட்லிக் கடை நடத்தி வந்தார். வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து இட்லிக்கடையை திறக்கும் அம்சா இன்று காலை 6 மணிவரை எழுந்திருக்க வில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தனர். அங்கு தலை மற்றும் முகத்தில் ரத்த வெள்ளத்துடன் மூதாட்டி அம்சா இறந்து கிடந்தார். அவர் படுத்திருந்த பாயிலும் ரத்தம் கிடந்தது. அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகித்தனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. விஜயகுமார், குடியாத்தம் டி.எஸ்.பி. விஜயகுமார், காட்பாடி டி.எஸ்.பி. மதிவாணன், கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அம்சாவின் பிணத்தை பார்வையிட்டனர்.
மேலும் தடய அறிவியல் நிபுணர் பாரி மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். துப்பறியும் நாய் சீட்டா வரவழைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரதராமி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூதாட்டி அம்சா தனிமையில் இருந்ததால் அவர் நகை, பணம் ஏதாவது வைத்திருந்தாரா? அதனை அபகரிக்க மர்ம நபர்கள் மூதாட்டி அம்சாவை அடித்து கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating