என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: காதலன்– வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்!!
துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சுமித்ரா (21). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ஆம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம் 14–ந்தேதி சுமித்ரா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பெற்றோர் கைப்பற்றினர்.
அதில் சாவுக்கு அதே பகுதியை சேர்ந்த காதலன் ஆனந்த் காரணம் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் பக்கத்துவீட்டில் வசிக்கும் இளையராஜாவும் சுமித்ராவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து ஆனந்த், இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சுமித்ராவின் பெற்றோர் துரைபாக்கம் போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி தெரிந்ததும் ஆனந்தும், இளையராஜாவும் தலைமறைவாகி விட்டனர். ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அவர்கள் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுமித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் இன்று காலை துரைபாக்கம் ராஜீவ்காந்தி சாலை சிக்னல் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தி வருகிறார்கள்.
Average Rating