இடி மழையின்போது செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்கும் அபாயம்
இடி மழையின்போது வெளியிடங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்கும் அபாயம் உண்டு என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் லண்டனில் 15 வயது சிறுமி ஒருத்தி ஒரு பூங்காவில் இருந்தபோது அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. அந்த நேரத்தில் அவள் செல்போனை பயன்படுத்தினாள். அவளை மின்னல் தாக்கியது. அதில் அவள் தப்பிப்பிழைத்து விட்டபோதிலும் அதன் பாதிப்பு இன்னும் அவளுக்கு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டான பிறகும் அவள் இன்னும் சக்கர நாற்காலியில் தான் நடமாடி வருகிறாள் என்று இங்கிலாந்து டாக்டர் ஸ்விந்தா எஸ்பிரிட் எச்சரிக்கிறார்.
மின்னல் தாக்கும்போது உடற்தோலில் உள்ள எதிர்ப்பு சக்தி உடல் முழுவதும் கடத்தப்படுகிறது. அதனால் மின்னலின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. ஆனால் செல்போன் போன்ற உலோகப்பொருள் நம் தோலோடு தொடர்பு கொண்டிருந்தால் எதிர்ப்புசக்தி உடலில் பரவுவதை அது தடுத்து, பாதிப்பை அதிகரிக்கிறது என்று அந்த டாக்டர் கூறினார். அதோடு செல்போன் பேசியபோது மின்னல் தாக்கி சீனா, மலேசியா, தென்கொரியா ஆகிய நாடுகளில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் இறந்து போய் இருக்கிறார்கள் என்றும் அந்த டாக்டர் தெரிவித்தார்.