அமெரிக்காவில் 12 வயது மகளை கொடுமைப்படுத்திய இந்திய தம்பதியர் கைது!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குவீன்ஸ் கவுண்ட்டி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக அவசர சிகிச்சை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
அந்த முகவரிக்கு சென்று பார்த்த மருத்துவ உதவி மற்றும் மீட்புக் குழுவினர், வலது கையின் மணிக்கட்டு எலும்புக்கு கீழே கரம் வெட்டப்பட்டு, ரத்தம் வழிந்தோடிய நிலையில் 12 வயது மதிக்கத்தக்க பெண் மயங்கிக் கிடந்தாள்.
அவளை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்று தையல் போட்டு சிகிச்சை அளித்தபோது, மாயா என்ற அந்த பெண்ணின் உடலின் ஏராளமான பகுதிகளில் வெட்டுக் காயங்களும், அடித்ததால் ரத்தம் கன்றிப்போன பழைய தழும்புகளையும் கண்டு திடுக்கிட்ட டாக்டர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
மாயாவிடம் இது தொடர்பாக போலீசார் விசாரித்தபோது தனது தந்தையான ராஜேஷ் ரனோட் என்பவரும் அவரது இரண்டாவது மனைவியான ஷீத்தல் என்பவரும் தன்னை பல ஆண்டுகளாக வீட்டினுள் அடைத்து வைத்து இரும்புப் பிடி போட்ட துடைப்பம், பந்து அடிக்கும் கட்டை, பூரிக்கட்டை, பெல்ட் ஆகியவற்றால் அடித்து, காயப்படுத்தி, சித்ரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து, ராஜேஷையும் மாயாவின் சிற்றன்னை ஷீத்தலையும் இளம் சிறார்கள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
60 ஆயிரம் டாலர்களை ஜாமின் தொகையாக பெற்று ஷீத்தலையும், 25 ஆயிரம் டாலர்களை ஜாமின் தொகையாக பெற்று ராஜேஷையும் சிறையில் இருந்து விடுவிக்கலாம் என்று உத்தரவிட்ட குயீன்ஸ் கவுண்ட்டி கோர்ட் நீதிபதி, இவ்வழக்கின் மறு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
இந்த வழக்கில் சிறுமி மாயாவை அடைத்து வைத்து, அடித்து, உதைத்து, சித்ரவதை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஷீத்தலுக்கு அதிகபட்சமாக 33 ஆண்டு சிறை தண்டனையும், ராஜேஷ் ரனோட்டுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating