சேலம் சைக்கோ கொலயாளியின் 3-வது மனைவி-2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு!!
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ரெஜினாவை (வயது 32) கொன்று பிணத்தை சேலம் அருகே ரெயில் பாதையில் வீசப்பட்டு இருந்தது. இந்த உடலை சேலம் ரெயில்வே போலீசார் மீட்டு விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சேலம் வீராணம் போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு குறித்து சேலம் அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் முருகசாமி, அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ், வீராணம் சப்–இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ரெஜினாவின் கணவர் ரமேசை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரமேசின் 3–வது மனைவி தங்கம் (வயது 32), சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த விமல்ராஜ் (வயது 24) , முள்ளு என்கிற விக்னேஸ் (வயது 22) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கொலை செய்ய உதவி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். ரெஜினாவின் கணவர் மற்றும் அவரது நண்பரும் பள்ளிப்பட்டியை சேர்ந்தவருமான ரமேசையும் போலீசார் தேடிவருகிறார்கள். இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். ரமேஷ் ஏற்கனவே கொலை வழக்குகளில் கைதானவர். இதுதவிர வேறு பல்வேறு வழக்குகளும் இவர் மீது உள்ளது. இதனால் இவர் பழைய ரவுடிகள் அல்லது நண்பர்கள் வீடுகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இதை வைத்து இவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் போலீசார் தேடிவருகிறார்கள். ஆனால் இவர் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
போலீசாரால் தேடப்படும் ரமேஷ் 3–வது மனைவி தங்கத்திடம் மிகவும் பாசமாக இருந்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது முதல் மனைவி ரெஜினாவின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். இதை அறிந்த தங்கம் ஆத்திரம் அடைந்து ரமேசை திட்டி உள்ளார். ரெஜினா உயிருடன் இருந்தால் தனக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். ரமேஷ் தன்னை விட்டு சென்று விடுவார் என தங்கம் கருதி ரெஜினாவை கொலை செய்ய ரமேசை தூண்டி விட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இந்த காரணத்திற்காக ரெஜினா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள்.
Average Rating