சிதம்பரம் அருகே அண்ணியை அடித்து கொன்று வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
சிதம்பரம் அருகே வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 39). இவரது தம்பி விஜயகுமார் (32). இருவரும் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கோதண்டபாணி ஊர் திரும்பினார். இதுபோல் 2 மாதத்துக்கு முன்பு விஜயகுமாரும் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று அண்ணன்–தம்பி இருவரும் மதுகுடித்துவிட்டு வீட்டின் அருகில் பேசி கொண்டிருந்தனர். அப்போது கோதண்டபாணியின் மனைவி ராஜலட்சுமி (34) குறுக்கிட்டு தனது கணவரை சாப்பிட வருமாறு வீட்டுக்கு அழைத்தார். குடும்ப விஷயம் பேசிக் கொண்டிருக்கும்போது எப்படி தனது அண்ணனை அழைக்கலாம் என்று விஜயகுமார் ராஜலட்சுமியிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து ராஜலட்சுமி தலையில் ஓங்கி அடித்தார். இதில் ராஜலட்சுமி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதைப்பார்த்ததும் விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து கோதண்டபாணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜலட்சுமியை மீட்டு ஒரு காரில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ராஜலட்சுமியை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ராஜலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இதனையறிந்த விஜயகுமார் மிகவும் வேதனையடைந்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தன்னை கைது செய்வதோடு, ஊரார் தன்னை கேலி செய்வார்களே என்று எண்ணினார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் வீட்டின் அருகில் உள்ள ஒரு புளியமரத்தில் கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒரத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணியை அடித்து கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating