தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தப்பி ஓட்டம்!!
தென்காசி அருகே உள்ள ஆய்குடி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த ஜிஜி (வயது 20), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார்.
கல்லூரி முடிந்து ஓய்வு நேரத்தில் மாணவி ஜிஜி விடுதி வளாகத்தில் அமர்ந்து படித்து வந்தார். அப்போது கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்த ஒரு பாதிரியார் மாணவி ஜிஜியிடம் அன்பாக பேசுவதுபோல் பேசி, ‘செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாதிரியாரின் எண்ணத்தை புரிந்து கொண்ட மாணவி, உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் மீண்டும் ஒரு நாள் அதே பாதிரியார் மாணவியிடம் மீண்டும் சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த மாணவி, பாதிரியாரின் தவறான நடவடிக்கை குறித்து, கல்லூரி நிர்வாகிகளிடம் புகார் கூறினார்.
ஆனால் கல்லூரி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவி ஜிஜி தனது பெற்றோரிடம் புகார் கூறினார். கேரளாவில் இருந்து கல்லூரிக்கு வந்த மாணவியின் பெற்றோர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிடில் போலீசில் புகார் செய்வோம் என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாதிரியாரை நீக்கி விட்டதாகவும், அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளனர்.
இந்த தகவல் கல்லூரி மாணவ– மாணவிகள் மத்தியில் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் பாதிரியாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முன்பு திரண்டனர். இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகிகள் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து அனைவரும் திங்கட்கிழமை முதல் கல்லூரிக்கு வரும்படி உத்தரவிட்டனர்.
ஆனாலும் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி முன்பு திரண்டு நின்று போராட்டம் நடத்தியதால் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பாதிக்கப்பட்ட மாணவி ஜிஜி, பாதிரியார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றது பற்றி கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட பாதிரியாரை தேடினார்கள். ஆனால் அந்த பாதிரியார் அதற்குள் வெளியூர் தப்பி ஓடி விட்டார்.
அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி இன்று போலீசில் முறைப்படி புகார் செய்கிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating