ஈவ்டீசிங் கொடுமை: பஸ்சிலிருந்து தள்ளிவிட்டதில் மாணவியின் கால் முறிவு – 4 பேர் கைது!!
மதுரை, கொடிக்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவருடைய மகள் நித்யா, மதுரையில் உள்ள அரசு காக்கைப்பாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வழக்கம்போல் பஸ்சில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதே பஸ்சில் வந்த கத்தப்பட்டியைச் சேர்ந்த சில வாலிபர்கள் நித்யாவை கேலி செய்தனர். அவர்களை அதே பஸ்சில் வந்த நித்யாவின் ஊரை சேர்ந்த சிலர் கண்டித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் நேற்று காலை நித்யா பஸ்சில் வரும்போது மீண்டும் வம்பு செய்தனர். பஸ் ஒத்தக்கடை பகுதியில் வந்தபோது உள்ளே நின்று கொண்டிருந்த நித்யாவை, வாலிபர்கள் பிடித்து இழுத்து பஸ்சில் இருந்து கீழே தள்ளினர். இதில் தடுமாறி கீழே விழுந்ததில் நித்யா பலத்த காயமடைந்தார்.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார், 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரான ராஜராஜன் (20) உள்பட 4 வாலிபர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
Average Rating