நாகரில் மர்மமாக இறந்த 10–ம் வகுப்பு மாணவியின் பெற்றோரிடம் டி.எஸ்.பி. விசாரணை!!
ராஜாக்கமங்கலத்தை அடுத்த அழகன்விளையை சேர்ந்த வைகுண்டமணி என்பவரது மகள் சுபிதா (வயது 15). 10–ம் வகுப்பு மாணவி.
இவர் கடந்த 6–ந்தேதி வீட்டின் அருகே உள்ள வாழை தோப்புக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். ராஜாக்கமங்கலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுபிதா தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரை யாரும் எரித்துக் கொன்றார்களா? என்ற சந்தேகம் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் கலெக்டர் நாகராஜனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதில், சுபிதா சாவு பற்றியும், அவரது பெற்றோர் குறித்தும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருந்தனர். சுபிதா இறந்து கிடந்த வாழைத்தோப்புக்குள் மரங்கள் கருகவில்லை, அவர் அங்கும் மிங்கும் அலறி அடித்து ஓடியதற்கான தடயங்கள் இல்லை, தீ பிடித்து எரியும்போது அவரது அலறல் சத்தம் அக்கம் பக்கத்தாருக்கு கேட்கவில்லை, காலை 5.30 மணிக்கு புறப்பட்ட மாணவி 7.30–க்குள் இறந்து இருக்கிறார்.
இது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறதா? என்று பல்வேறு கேள்விகள் போலீசாருக்கும், ஊர்மக்களுக்கும் ஏற்பட்டது. இதனால் சுபிதா சாவுக்கு பின்னால் பல மர்மங்கள் இருக்கும் என்று கருதுகிறார்கள். அந்த மர்ம முடிச்சுகள் அவிழ்ந்ததால்தான் ஊர் மக்கள் நிம்மதியாக நடமாட முடியும் என்று கருதுகிறார்கள்.
இதுபற்றி அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இறந்து போன மாணவி சுபிதா மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள், ஊர்மக்களிடம் இப்பிரச்சினை குறித்து நேரில் விசாரித்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கன்னியாகுமரி டி.எஸ்.பி. செல்வராஜுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, சம்பவம் நடந்த அழகன்விளை பகுதிக்கு இன்று டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் போலீசார் அதிரடியாக சென்றனர். அங்கு மாணவியின் பெற்றோரிடம் சம்பவம் குறித்து விலாவாரியாக கேட்டறிந்தனர். தொடர்ந்து மாணவியின் தோழிகள், உறவினர்கள், ஊர்மக்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அவை அனைத்தையும் திரட்டிய போலீசார் இன்னும் இரண்டொரு நாளில் இதுபற்றி எஸ்.பி. மணிவண்ணனுக்கு விரிவான அறிக்கை அளிக்கிறார்கள். அதன் பிறகு இந்த வழக்கு வேகம் எடுக்கும் என்றும் அப்போது மாணவியின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன? அவர் எரிக்கப்பட்டாரா? அல்லது அவரே தீக்குளித்து இறந்தாரா? என்பது பற்றிய முழு விவரம் தெரிய வரும்.
Average Rating