கர்ப்பிணி உதவித்தொகை வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது!!
கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவரது மருமகள் முத்துலட்சுமி.
கர்ப்பமாக இருந்த முத்துலட்சுமி கர்ப்பிணிகளுக்கான அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் 2 தவணையாக அதே பகுதியில் உள்ள கிராம சுகாதார நிலையத்தில் மொத்தம் ரூ. 8 ஆயிரம் பெற்று கொண்டார்.
சமீபத்தில் முத்துலட்சுமிக்கு குழந்தை பிறந்தது. எனவே மீதமுள்ள ரூ. 4 ஆயிரம் உதவித் தொகையை பெறுவது தொடர்பாக பாண்டியன் அந்த கிராம சுகாதார நிலையத்துக்கு சென்றார். அந்த தொகையை பெற வேண்டுமானால் ரூ.500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என கிராம சுகாதார செவிலியர் விஜயலட்சுமி (46) கேட்டார். அந்த ரூபாயை தனது வீட்டுக்கு வந்து தர வேண்டும் என்றும் கூறினார்.
இதனால் திடுக்கிட்ட பாண்டியன் கடலூர் லஞ் ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் யோசனையின்படி, ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாயுடன் இன்று காலையில் விஜயலட்சுமியின் வீட்டுக்கு பாண்டியன் சென்றார்.
விஜயலட்சுமி அந்த பணத்தை வாங்கியபோது ஏற்கனவே அப்பகுதியில் பதுங்கி மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசங்கர் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சண்முகம் ஆகியோர் பாய்ந்து சென்று கையும், களவுமாக பிடித்தனர்.
அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விஜயலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating