திட்டக்குடி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய மேலும் 8 பேர் கைது!!
திட்டக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 9–ம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் 2 பேர் கடந்த மாதம் 11–ந் தேதி பள்ளிக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து திட்டக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 சிறுமிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரித்ததில், திட்டக்குடியில் காணாமல் போனதாக தேடப்பட்ட மாணவிகள் என்பது தெரியவந்தது. அப்போது, திட்டக்குடியை சேர்ந்த மதபோதகரான அருள்தாஸ் (வயது 60) என்பவர் மாணவிகளுக்கு ஆடம்பர பொருட்கள் போன்றவற்றை வாங்கி கொடுத்து அவர் சொல்வதையெல்லாம் கேட்கும் அளவுக்கு மாற்றினார். பிறகு அவர் ஆபாச படங்களை காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது.
இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி அந்த மாணவிகளை மிரட்டி விபசார தொழிலில் ஈடுபட வைத்தார் என்றும் தெரிந்தது.
பிறகு லட்சுமி, விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்த கலாவிடம் (40) ஒரு குறிப்பிட்ட தொகை வாங்கி 2 மாணவிகளையும் விற்றார். பிறகு கலா, அதே பகுதியில் உள்ள ஜெமினா ஆகியோர் அந்த மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தினர். இதற்கு புரோக்கராக கார் டிரைவர் சதீஷ்குமார் செயல்பட்டார். இவர்கள் 5 பேரையும் கடந்த 5–ந் தேதி போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மாணவிகளை மிரட்டி விபசாரத்தில் தள்ளியதாக மேலும் 6 பெண்கள் உள்பட 8 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் இவர்கள் மாணவிகளுக்கு தங்களுடைய வீடுகளில் அடைக்கலம் கொடுத்து 55 வயதை கடந்த முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர் என்று தெரிந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating