தாயையும் மகளையும் வெட்டிக் காயப்படுத்தி வீட்டிலிருந்த பணமும் நகையும் கொள்ளை!!
முகமூடி அணிந்துகொண்டு வீட்டிற்குள் உள்நுழைந்த ஆறு கொள்ளையர்கள் அவ் வீட்டிலிருந்த தாயையும் மகளையும் கொடூரமாக வெட்டிக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இக் கொடூரச்சம்பவம் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கொடிகாமம் கச்சாய் தெற்கில் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்களால் வெட்டிக் காயப்படுத்தப்பட்ட குமாரசுவாமி சிவபாக்கியம் (வயது 57) மற்றும் அவருடைய மகளான குமாரசுவாமி நிதர்சினி (வயது 23) ஆகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் தெற்கிலுள்ள வீட்டிற்குள் நேற்று அதிகாலை 12.30 மணியளிவில் 6 கொள்ளையர்கள் முகமூடிகளை அணிந்தவாறு உட்பிரவேசித்துள்ளனர். இதனைக் கண்ட குறித்த தாயும் மகளும் கூக்குரலிட்டுக் கத்த முற்பட்டுள்ளனர். ஆனால் இருவரையும் கொள்ளையர்கள் வெட்டிக்காயப்படுத்திவிட்டு அவர்களை அச்சுறுத்தி அங்கிருந்த சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் பணத்தினையும் கையடக்கத் தொலைபேசியையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இக்கொள்ளையர்கள் குறித்த வீட்டில் சுமார் ௧ மணித்திலாயலங்களாக நின்று தேடுதல் நடத்தி குறித்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் சென்ற பின்னர் இரு பெண்களும் எழுப்பிய அவலக்குரலினால் அங்கு சென்ற அயலவர்கள் இருவரையும் மீட்டு சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இந்த இருவரையும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை யாழ். பலாலி வீதிக்கு அருகில் உரும்புராய்ச் சந்தியிலுள்ள வீடொன்றிலும் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த ஒருவரின் 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் தங்க நகைகளும் திருடப்பட்டள்ளதாக கோப்பாய் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. மேலும் இவருடைய கடவுச்சீட்டும் களவாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating