ஆழ்வார்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது!!
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், பொன் சுந்தர். சமையல் காரர். இவரது மனைவி சிவகாமசுந்தரி (வயது 45). இவர்களுக்கு குழந்தை இல்லை. சிவகாம சுந்தரி மீன் வியாபாரம் செய்து வந்தார். வாத்துக்களும் வளர்த்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. அவரது மகன் செண்டான் என்ற ராமச்சந்திரன் (37). இவரும் வாத்துக்கள் வளர்த்தார். சிவகாமசுந்தரியும், ராமச்சந்திரனும் உறவினர்கள். இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன. இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.மேலும் பொன்சுந்தரின் தங்கையை ராமசந்திரன் கேலி கிண்டல் செய்தது தொடர்பாகவும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை சிவகாமசுந்தரியின் வாத்துகள் ராமசந்திரன் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. ராமசந்திரன், அவரது தாய் வடிவு ஆகிய இருவரும் சிவகாமசுந்தரியின் வாத்துகளை அடித்தனர்.
அப்போது அங்கு வந்த சிவகாமசுந்தரி 2 பேரையும் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ராமசந்திரன் தனது தாய் கண் முன்பே அரிவாளால் சிவகாமசுந்தரியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் சிவகாமசுந்தரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், கடையம் இன்ஸ்பெக்டர் சிவமுருகன், ஆழ்வார்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் இசக்கிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தாய் –மகனை தேடி வந்தனர். நள்ளிரவில் அப்பகுதியில் பதுங்கியிருந்த ராமசந்திரனை போலீசார் கைது செய்தனர். ராமசந்திரனின் தாய் வடிவு மீது பெண்ணை கொலை செய்ய தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் வடிவை தேடி வருகின்றனர்.
Average Rating