மாணவிகளிடம் ஈவ்–டீசிங் ரெயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது!!
மாணவிகளிடம் ஈவ்–டீசிங்கில் ஈடுபட்ட ரெயில்வே அதிகாரி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நாகை வந்த போது தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 5 பேர் ஏறினார்கள். அவர்ளுடன் சக மாணவர் நீடாமங்கலம்த்தை சேர்ந்த சுரேசும் பயணம் செய்தார். அப்பெட்டியில் இருந்த 3 பேர் மாணவிகளை ஈவ்–டீசிங் செய்தனர். மாணவிகளின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் பயந்து நடுங்கினார்கள். இதனை பார்த்ததும் மாணவர் சுரேஷ் தட்டிக் கேட்டார். அவரை ரெயிலில் வந்த 3 பேரும் தாக்கினார்கள். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரெயில் திருவாரூர் வந்ததும் சுரேஷ் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து மாணவிகளிடம் ஈவ்–டீசிங்கில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களது பெயர் பிரபு (30), பிரபாகரன் (26), அருண்ராஜ் (26) என்பது தெரிய வந்தது.
இவர்களில் அருண்ராஜ் தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை ரெயில் நிலையத்தில் நிலைய அலுவலராக வேலைபார்த்து வருவது தெரிய வந்தது. பிரபாகரன் பண்டாரவாடை ரெயில் நிலையத்தில் கேட் கீப்பராகவும், பிரபு போர்டராகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் ஈவ்–டீசிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவர் சுரேஷ் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓடும் ரெயிலில் ரெயில்வே ஊழியர்களே ஈவ்–டீசிங்கில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating