மரக்காணம் அருகே மயக்கபொடி தூவி பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை கொள்ளை!!
மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமம் வடக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் விவசாயி. இவரது மனைவி பவுனம்மாள் (வயது 55) இளநீர் வியாபாரி.
இவர் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட ஒரு மர்ம வாலிபர் அங்கு வந்தார். குடிக்க தண்ணீர் வேண்டும் என்று பவுனம்மாளிடம் கேட்டார். அவர் வீட்டுக்குள் சென்று சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தார். அதை வாங்கி குடித்த வாலிபர் பவுனம்மாள் மீது மயக்க பொடியை தூவினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அவரது கம்மல், மூக்குத்தி மற்றும் தங்க சங்கிலியை அந்த வாலிபர் கழற்றினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ. 1 லட்சமாகும். சிறிது நேரம் கழித்து பவுனம்மாளுக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது அவருக்கு தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த மர்ம வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
Average Rating