தேனி அருகே கணவரின் கள்ளக்காதலால் 3 மகள்களை கொன்று தாய் தற்கொலை!!
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 34). கம்பம் பகுதியில் உள்ள ஒரு புண்ணாக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பத்மா (29). கடந்த 12 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர்.
இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனையும் மீறி மணம் முடித்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு கார்த்திகா (11), நாகஜோதி (9), ப்ரியா (7) ஆகிய 3 மகள் இருந்தனர். இந்த 3 பேரும் கம்பம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படித்து வந்தனர்.
இதற்கிடையே ராஜேஷ் கண்ணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த பத்மா தனது கணவரை கண்டித்தார். இதனால் அடிக்கடி வீட்டில் பிரச்சினை வெடித்தது. ஆனாலும் ராஜேஷ் கண்ணா தனது தொடர்பினை விடவில்லை.
கணவரின் நடவடிக்கை பத்மாவுக்கு பிடிக்கவில்லை. எனவே தற்கொலை செய்ய தீர்மானித்தார். தான் இறந்தால் குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடும். எனவே குழந்தைகளை கொன்று தற்கொலை செய்வது என முடிவு எடுத்தார்.
அதன்படி நேற்று காலை 3 சிறுமிகளும் பள்ளிக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் பத்மா உணவு எதுவும் தயார் செய்ய முடியாமல் அழுதபடி இருந்தார். உடனே தனது குழந்தைகளிடம் இன்று பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். பின்னர் மனதை கல்லாக்கி கொண்ட பத்மா ஏற்கனவே சாக்லெட்டில் திம்மெட் குருணை மருந்து விஷத்தை தடவி வைத்திருந்த சாக்லெட்டுகளை 3 மகள்களுக்கும் கொடுத்து தானும் உட்கொண்டார்.
திம்மெட் கொடிய விஷத் தன்மை கொண்டது என்பதால் 3 சிறுமிகளும் அலறி துடித்தவாறு இறந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 4 பேரும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
சிறுமிகளை எழுப்பிய போது அவர்கள் உயிர் இல்லாமல் இருந்தது கண்டு பதறி போனார்கள். உடனே பத்மாவை மட்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பத்மா இறந்தார்.
இது குறித்து கம்பம் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating