ராஜபாளையம் அருகே பஞ்சு வியாபாரி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சவுந்திர பாண்டியனார் நகரை சேர்ந்தவர் தலக்கு தேவர் (வயது 55). கழிவு பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை வீட்டை விட்டு வியாபார விஷயமாக பேச மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். ஆனால் இரவு மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
அவரை பற்றி விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தலக்குத்தேவர் குடும்பத்தினர் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையே இன்று காலை முத்துலிங்காபுரத்தில் இருந்து வன்னியம்பட்டி போகும் பாதையில் உள்ள காட்டுப்பகுதியில் தலக்குத் தேவர் முகம், கழுத்து, உடல் ஆகிய பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே தலக்குத்தேவர் சென்ற மோட்டார் சைக்கிள் கிடந்தது.
வழக்கமாக இந்த பகுதிக்கெல்லாம் தலக்குத்தேவர் செல்வது கிடையாதாம். எனவே யாரோ திட்டம் போட்டு அவரை இந்த இடத்திற்கு வரவழைத்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating