தூக்க கலக்கத்தில் விபரீதம்: ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பெண்!!
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி முப்புடாதி (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று ஆறுமுகம் குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமிகும்பிட்டு விட்டு இன்று அதிகாலை குடும்பத்தினருடன் நெல்லைக்கு புறப்பட்டார்.
மதுரையில் இருந்து சாத்தூர் வழியாக நெல்லை வந்த பஸ்சில் ஏறினார். பஸ்சில் ஏறியதும் ஆறுமுகம், அவரது மனைவி முப்புடாதி மற்றும் குழந்தைகள் பஸ்சின் படிக்கட்டுக்கு நேராக உள்ள சீட்டில் அமர்ந்தனர். முப்புடாதி சீட்டின் ஓரமாக இருந்தார்.
இந்நிலையில் கயத்தாறு அருகே மெய்த்தலைவன்பட்டி அருகே வரும் போது முப்புடாதி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். திடீரென விழித்த அவர் பஸ்சின் படிக்கட்டு வழியாக வெளியே குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் மற்றும் பயணிகள் உடனடியாக டிரைவரிடம் கூறி பஸ்சை நிறுத்தினர்.
பஸ்சில் இருந்து வெளியே குதித்ததால் முப்புடாதியின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடனே அவரை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தூக்க கலக்கத்தில் முப்புடாதி பஸ்சில் இருந்து வெளியே குதித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating