பெரம்பூரில் காதல் தகராறில் மோதல்: 2 மாணவர்களுக்கு வெட்டு!!
சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 18). பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (18). இருவரும் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்.
வினோத்குமார் பெரம்பூர் பி.டி.தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மாணவியை காதலித்து வந்தார். அதே மாணவியை பி.டி.தோட்டம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரும் காதலித்தார்.
இன்று காலை வினோத்குமார் தனது நண்பர் அசோக் குமாரை அழைத்துக் கொண்டு பெரம்பூர் பி.டி. தோட்டத்துக்கு சென்றார். அங்கு தான் காதலித்து வந்த மாணவியை சந்தித்து பேசினார்.
இதை பிரபு பார்த்து விட்டார். நான் காதலிக்கும் பெண்ணிடம் எப்படி பேசலாம் என்று கூறி பிரபு வினோத்குமாரிடம் தகராறு செய்தார்.
இதையடுத்து வினோத்குமாரும், அசோக்குமாரும் சேர்ந்து பிரபுவை சரமாரியாக அடுத்து உதைத்தனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற பிரபு தனது நண்பர்கள் ஜெகன், பிரவீண்குமார், பிரபாகரன், கமலக்கண்ணன், மணிகண்டன் உள்பட 8 பேருடன் ஷேர் ஆட்டோவில் வினோத்குமாரை தேடி சென்றார்.
அப்போது வினோத்குமாரும், அசோக்குமாரும் பெரம்பூர் பாலத்தின் அடியில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் ஆட்டோவில் வந்த 8 பேரும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.
வெட்டு காயம் அடைந்த வினோத்குமார், அசோக்குமார் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி செம்பியம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இன்ஸ்பெக்டர் உத்திரபாண்டி அவர்கள் இருவரையும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரபு உள்பட 8 பேரையும் தேடி வருகிறார்கள்.
Average Rating