இரண்டாம் உலகப்போரில் கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொரியப் பெண்கள் போப்பை சந்திக்கிறார்கள்!!
தென்கொரியாவில் நடைபெற்ற இளைஞர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட போப் பிரான்சின் ஐந்து நாட்கள் கொண்ட தென்கொரிய சுற்றுப்பயணம் இன்று நடைபெறும் ஒரு பெரும் பிரார்த்தனைக் கூட்டத்துடன் நிறைவடைகின்றது. இந்த நிகழ்ச்சியின்போது போப்பை சந்திக்க இருப்பவர்களில் லீ என்ற 86 வயதுப் பெண்மணியும் ஒருவராவர். இவர் வயதை ஒத்த இன்னும் இரண்டு மூதாட்டிகளும் இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் முன்னணியில் அமரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதற்கான பின்னணி மிகவும் சோகமயமானது. இரண்டாம் உலகப்போர் சமயத்தின்போது போர்முனையிலிருந்த தங்களது வீரர்களை உற்சாகப்படுத்த ஜப்பான் இவர்களைப் போன்று 238 கொரியப் பெண்களை கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது. ஜப்பான் மீது தென் கொரியாவிற்கு இருக்கும் மனக்கசப்புகளில் இந்தக் குற்றச்சாட்டும் பிரதான இடத்தை வகிக்கின்றது.
இந்தப் பெண்களில் இருவர் இந்த வருடம் இறந்துவிட இன்னும் 55 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர். இவர்களின் சராசரி வயது தற்போது 88 ஆகக் காணப்படுகின்றது. 70 வருடங்களாகத் தாங்கள் சுமந்துவரும் சோகங்களை என் கண்ணீரால் அவருக்குத் தெரிவித்து இந்த வலியிலிருந்து விடுபடும் வழியை அருளுமாறு கேட்பேன் என்று லீ குறிப்பிட்டார். அமைதியான முறையில் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் என்பதை அவரிடம் நான் குறிப்பிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
தங்களது இந்த செயலுக்கான தகுந்த மன்னிப்பை வேண்டியோ, நஷ்டஈட்டினை அளிக்கவோ ஜப்பான் தொடர்ந்து மறுத்துவரும் இந்த நேரத்தில் உலக கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதன்மூலம் ஜப்பானுக்கு ஒரு இக்கட்டான நிலையை உருவாக்க இவர்கள் முயற்சிக்கக்கூடும் என்று செய்திகள் தெரிவித்தன.
சமீபத்தில் நடைபெற்ற கொரிய படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை போப் தனித்தனியே சந்தித்து ஆறுதல் அளித்தார். அதுபோல் ஒற்றுமை மற்றும் ஆறுதலுக்கான வார்த்தைகளை அளிப்பதைத் தவிர அரசியல் விவகாரங்களில் போப் தலையிடுவது கிடையாது என்று அவரது தகவல் தொடர்பாளரான ரெவரென்ட் பெடரிகோ லொம்பார்டி தெரிவித்தார்.
Average Rating