தந்தை கண்டித்ததால் தீக்குளித்த பிளஸ்–1 மாணவர் கிணற்றில் குதித்து சாவு!!
திருப்பூர் வடக்கு தோட்டம் 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன்(வயது 17). அனுப்பர் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
சீனிவாசன் சரியாக படிப்பதில்லை. மேலும் சரியாக பள்ளிக்கும் செல்வதில்லை. பள்ளிக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பும் சீனிவாசன் பள்ளிக்கு செல்லாமல் எங்காவது சென்று விடுவார். பள்ளி முடியும் நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவார்.
இது குறித்து பள்ளியில் இருந்து சீனிவாசன் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மிகவும் மனம்நொந்த அவர் தனது மகனிடம் ‘நான்தான் படிக்காமல் கஷ்டப்படுகிறேன். நீயாவது நன்றாக படிக்க வேண்டும். நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தான் கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறேன்’ என்றார்.
சரி சரி என்று அறிவுரைகளை கேட்டுக்கொண்ட சீனிவாசன் அதன்படி நடக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பள்ளி சென்ற சீனிவாசன் மாலையில் வீடு திரும்பினார். அதற்கு முன்னரே உங்கள் மகன் மீண்டும் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்ற தகவல் சேகருக்கு வந்தது. எனவே அவர் மகனை கண்டித்ததோடு மீண்டும் அறிவுரை கூறினார். அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத சீனிவாசன் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
பின்னர் வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் குதித்து விட்டார். இதைப்பார்த்த தந்தை பதறிப்போனார். சீனிவாசன் கிணற்றில் குதித்தது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் குதித்து சீனிவாசனை தேடினர். அவர்களால் சீனிவாசனின் உயிரற்ற உடலைத்தான் மீட்க முடிந்தது. சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகனின் உடலைப்பார்த்து சேகரும் அவரது குடும்பத்தினரும் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating