சுசீந்திரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்!!
சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.ஏ. பட்டதாரி. இவர், சாமித்தோப்பு அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் ஆரல்வாய் மொழி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு வாலிபருக்கும் வருகிற 31–ந்தேதி சுசீந்திரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகள் செய்தனர்.
இதையடுத்து இருவீட்டிலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. திருமண அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ரஞ்சிதா திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் ரஞ்சிதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ரஞ்சிதா மாயமானது குறித்து மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமணத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் மாயமானதை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ரஞ்சிதா மாயமானது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் ரஞ்சிதாவை தேடினார்கள். அவர் வேலை பார்த்த தனியார் நிறுவனத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது ரஞ்சிதாவை அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர் ஒருவர் காதலித்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தேடினார்கள். அவரும் மாயமாகி உள்ளார். ரஞ்சிதாவை அந்த வாலிபர் கேரளாவிற்கு கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
Average Rating