விழுப்புரத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த நீதிபதி!!
கள்ளக்குறிச்சி அருகே வடக்குனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் பாஸ்கர் (வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரியாப்பிள்ளை மகள் சத்யா (18) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தனிமையில் சந்தித்து பேசும்போது திருமணம் செய்வதாக கூறி சத்யாவை பாஸ்கர் ஆசைக்கு இணங்க வைத்தார்.
பின்னர் திருமணம் செய்து கொள்ளுமாறு சத்யா வற்புறுத்தியபோது, பாஸ்கர் மறுத்துவிட்டார். இதனால் மனவிரக்தி அடைந்த சத்யா இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர். அப்போது சத்யாவுக்கு 17½ வயதே ஆன நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் சத்யாவுக்கு தற்போது 18 வயது பூர்த்தியடைந்ததால் மாற்று அமர்வு தீர்வு மையத்தில் பாஸ்கர் மற்றும் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சத்யாவை திருமணம் செய்துகொள்ள பாஸ்கர் ஒத்துக்கொண்டார்.
இன்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தேரடி பிள்ளையார் கோவிலில் சத்யா–பாஸ்கருக்கு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி திருமணம் நடத்தி வைத்தார். மேலும் மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்கி வாழ்த்தினார்.
நீதிபதியே முன்னின்று நடத்திய இந்த காதல் ஜோடி திருமணத்தை பலரும் வியப்புடன் பார்த்து சென்றனர்.
Average Rating