பெங்களூரில் கற்பழிப்பு கும்பலிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து புகார் அளித்த பெண்!!
பெங்களூரில் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் அவர்களிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள பிடாடி என்ற இடத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வேலைபார்க்கும் அலுவலத்தில் இருந்து புதன்கிழமை இரவு 10 மணிக்கு வீடு திரும்ப பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது காரில் வந்த இருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சுக்கொடுத்து எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.
அப்போது வேலை முடிந்து வீட்டிற்குச் செல்ல காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே காரில் இருந்த இருவரும் நாங்களும் அதே வழியாகத்தான் செல்கிறோம். உங்கள் வீட்டருகே இறக்கி விடுகிறோம். எங்களுடன் காரில் வாருங்கள் என்று தொடர்ந்து அழைத்துள்ளனர்.
இதனால் அந்த பெண்ணும் காரில் ஏறியுள்ளார். அவர்கள் இருவரும் அந்த காரை ஒரு பண்ணை வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இங்கே சிறிது வேலை இருப்பதால் அதை முடித்துவிட்டு உங்கள் வீட்டில் கொண்டு விடுகிறோம் என்று கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் இருவரின் பின்னால் அந்த வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அந்த வீட்டில் ஏற்கனவே ஒருவர் தயாராக இருந்துள்ளார். அவருடன் இந்த இரண்டு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை வீட்டிற்குள் தள்ளி வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர். இதில் இருந்து நைசாகத் தப்பி அந்த பெண், தனது ஆடை கிழிந்த நிலையில் இரவில் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் ஓடியே வந்து திவாராகேர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் அந்த வீட்டில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
Average Rating