காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
திருவள்ளூர் சிட்டாரம் பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் விஜயலட்சுமி (22). இவர் பூந்தமல்லி பழஞ்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விஜயலட்சுமியும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திருவள்ளூர் வேம்பம் சட்டியை சேர்ந்த ஆனந்தன் என்பவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. உடனே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயலட்சுமிக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தார்.
இது பிடிக்காமல் விஜயலட்சுமி கடந்த 20–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சரவணன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விஜயலட்சுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி தனது காதலன் ஆனந்துடன் வந்தார். நாங்கள் 2 பேரும் காதலிக்கிறோம். எங்களை பெற்றோர் பிரிக்க நினைக்கிறார்கள். அதனால்தான் வீட்டை விட்டு சென்றேன் என்று கூறினார்.
உடனே போலீசார் 2 பேரின் பெற்றோர்களிடம் பேசினர். அவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் அவர்கள் வீட்டுக்கு சந்தோசமாக சென்றனர். வருகிற 29–ந் தேதி திருமணம் நடைபெறுகிறது.
Average Rating