மதுக்கடைகளுக்கு முகத்தை மறைத்து சென்று மதுவாங்கும் பெண்கள்: நடவடிக்கை எடுக்க கொ.ஜ.க.கோரிக்கை!!
கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மது அருந்துவது என்பது தவறான செயல் என்ற நிலை மாறி மது அருந்துவது சாதாரணமான விஷயமாக தமிழகத்தில் மாறிவிட்டது. வீதிதோறும் மதுக்கடைகள் திறந்து விற்பனையை அதிகப்படுத்தி ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் மதுவை அருந்த தூண்டும் வகையில், தமிழக அரசின் செயல்பாடு அமைந்துள்ளது.
குறிப்பாக ஈரோடு, பல்லடம், கோவையில் சிங்காநல்லூர் போன்ற பகுதியில் சமீபகாலங்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு மது அருந்தி வருவதும், அவர்களை கண்டு ஆசிரியர்கள் அச்சப்படுவதும், பெண்கள் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்டு மது வாங்குவது என்பதும் சாதாரணமாக நடைபெற தொடங்கி விட்டது.
ஈரோடு மாவட்டத்தில் மதுவை வாங்கி புத்தகப்பையில் மறைத்து செல்லும் காட்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது. புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் மதுவை சுமப்பது வேதனைக்குரிய விஷயம். பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு மது ஒரு முக்கிய காரணமாக மாறி விட்டது. 21 வயது உட்பட்டோருக்கு மதுபானங்கள் விற்க தடை உள்ளது. ஆனால் சில டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்கின்றனர்.
எனவே 21 வயது உட்பட்டவருக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மதுவை விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Average Rating