கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளிப்பு!!
வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையம் காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவருடைய மனைவி சாந்தி (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினார்.
ஊருக்கு வந்தது முதல் சங்கர் தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து பணத்தை செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சாந்தி கண்டித்து வந்தார். இதனால் கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலையும், அதுபோல் இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சங்கர் இனிமேல் மதுகுடிக்க மாட்டேன் என்று சாந்தியிடம் சத்தியம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சங்கர் அதிக குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை பார்த்த சாந்தி மனமுடைந்தார். சத்தியத்தையும் மீறி கணவர் மதுகுடித்து வருகிறாரே என்று வேதனை அடைந்த சாந்தி இனி இவருடன் வாழ்வதைவிட சாவதே மேல் என்று எண்ணினார்.
இதையடுத்து வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி சாந்தி தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், உதவி சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating