வரதட்சணை கொடுமை: தூக்கில் பிணமாக தொங்கிய பெண்!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் குமார். அவரது மகள் ராசாத்தி ப்ரியா (வயது 22). லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பழனி ஆத்துகுமாரபாளையம் மேற்கு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (26) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 16.2.2012 அன்று பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர். இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ என்ற 2 வயது மகள் உள்ளாள்.
ஆரம்பத்தில் இனிதாக சென்ற வாழ்க்கையில் நாளடைவில் புயல் வீச தொடங்கியது. ராஜா தினமும் குடித்து விட்டு தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். அவ்வாறு வாங்கி வரவில்லை எனில் வேறு திருமணம் செய்ய போவதாக ராஜா மிரட்டி உள்ளார்.
மனமுடைந்த ராசாத்தி ப்ரியா நேற்று இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து ராசாத்தி ப்ரியாவின் தந்தை குமார் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராசாத்தி ப்ரியாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. சுந்தரராஜ் விசாரணை நடத்தி வருகின்றார்.
Average Rating