நாகர்கோவிலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி பெண் தற்கொலை!!
நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கேசவதிருப்பாபுரம் சானல்கரை பகுதியை சேர்ந்த அய்யாத்துரை என்பவரது மகள் சுஜி (வயது 21). பட்டப்படிப்பு படித்துள்ள இவர் பி.எட். படிப்பதற்காக ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்திருந்தார்.
நேற்று இரவு சுஜி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுஜி இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
சுஜியின் தாயார் செல்வராணியிடம் போலீசார் விசாரித்த போது சுஜியும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தது தெரிய வந்தது. சென்னையில் வேலை பார்க்கும் அந்த வாலிபர் இவர்களுக்கு தூரத்து உறவு முறை என்றும், இவர்களது காதலுக்கு சுஜியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது.
இதனால் மனமுடைந்து போன சுஜி நேற்று வீட்டில் செடிக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்ட போது ‘இந்த உலகத்தில் வாழ விருப்பமில்லாததால் சாகிறேன்’ என கூறினாராம்.
இதுகுறித்து செல்வராணி கொடுத்த புகாரின்பேரில் வடசேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating