தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரக் கொலை!!
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது.
தலையே இல்லாத முண்டமாக ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக அறிந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி விசாரித்தபோது டெசிரீ முருகன்(39) என்ற அந்தப் பெண் மிகத் தீவிரமான போதைப்பழக்கத்துகு அடிமையாகி விட்டிருந்ததாகவும், போதைப் பொருட்களை வாங்குவதற்காக விபசாரத்தில் ஈடுபட்டதால், அவளது குடும்பத்தாரே இந்த கொடூரக் கொலையை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலை தொடர்பாக ஒரு பெண், ஒரு மந்திரவாதி உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஜோகன்னஸ்பர்க் பகுதியில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தில், ஷரீன் பிள்ளை என்ற 41 வயது பெண், உடலில் சுமார் 50 இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். ஷரீன் பிள்ளையை அவரது கணவரே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியபோது, 3 நாட்கள் கழித்து போலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.
டர்பன் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு குழந்தைக்கு தாயான ரோஸ் பெல்(32) என்பவர், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது சவ அடக்கத்துக்கு சற்று முன்னதாக போலீசாரிடம் ஒரு நபர் சரணடைந்தார்.
போலீஸ் துறையில் வேலை செய்யும் அவர், சுமார் 6 ஆண்டுகளாக ரோஸ் பெல்லுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், சம்பவத்தன்று அவருடன் கட்டிப்பிடித்து, புரண்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கி வெடித்ததில் ரோஸ் பெல்லின் வயிற்றுக்குள் தோட்டா பாய்ந்து அவர் இறந்து விட்டதாகவும் சரணடைந்த தயாந்திரன் கவுண்டர் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக சமீபகாலமாக தொடர்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Average Rating