வடசேரியில் கல்லூரி மாணவியை காரில் கடத்திய கும்பல்: மேலும் 2 மாணவிகள், நர்ஸ் மாயம்!!
நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கட்டையன்விளை இடையன்விளை தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ஏஞ்சலா வின்சி (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பிய இவர் திடீரென மாயமானார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் வடசேரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், கல்லூரி முடிந்து வீடு அருகே வந்து கொண்டிருந்த தனது மகளை தெற்குதாமரை குளத்தை சேர்ந்த சீபாஸ் ஜாஸ்பின்(27) மற்றும் 3 பேர் சேர்ந்து பச்சை நிற காரில் கடத்தி சென்றுவிட்டனர். அவர்களிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகிறார்.
இதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே வசித்து வருபவர் ராம்சிங். இவரது மகள் காயத்ரி. நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 3–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25–ந் தேதி கல்லூரிக்கு சென்ற இவர் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராம்சிங் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள மந்தாரம்புதூரை சேர்ந்தவர் ஆல்பர்ட்(வயது 56). இவரது மகள் பிரபா(23) நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு சென்ற பிரபா வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
எனனே மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு ஆல்பர்ட் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
இரணியல் அருகே உள்ள பரம்பை பொட்டல்விளையை சேர்ந்த லாசர் என்பவரது மகள் ராஜாத்தி(வயது 25). நர்சு. இவர் நேற்று வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், ராஜாத்தி நர்சிங் படித்து விட்டு ஆந்திராவில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த போது ஒரு வாலிபருடன் காதல் வயப்பட்டதும், இதையறிந்த அவரது பெற்றோர் ராஜாத்தியை வீட்டுக்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது. எனவே மாயமான ராஜாத்தி காதலனுடன் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக, இரணியல் இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான ராஜாத்தியை தேடி வருகின்றனர்.
Average Rating