திருவெண்ணைநல்லூர்: பிளஸ்–1 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்!!
திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பேரங்கியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வரும் 16 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் இன்று (வியாழக்கிழமை) காலை அரசூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாட்டில் மணமக்கள் வீட்டார் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
நேற்று மாலை பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இருவீட்டு உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவி சாந்தா தலைமையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு மற்றும் அதிகாரிகள் அரசூரில் உள்ள அந்த திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர். இருவீட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்ணின் திருமண வயதான 18 வயது பூர்த்தி அடையாமல் உள்ள சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்று அறிவுரை வழங்கினர். இதையடுத்து மணப்பெண்ணை அவரது பெற்றோர் திருமண மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இந்த திருமணத்திற்காக வந்திருந்த உறவினர்களும், திருமணம் நடைபெறப்போவதில்லை என்பதை கேள்விப்பட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினர். பள்ளி மாணவிக்கு அவசர அவசரமாக திருமணம் நடைபெற இருந்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating