தலைமறைவான காதல் ஜோடி பற்றி தகவல் தெரிவிக்க ரூ.10 லட்சம் கேட்ட என்ஜினீயரிங் மாணவர்!!
ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாலதி (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாலதி அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக இவரது பெற்றோர் உமராபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சின்ன வரிக்கம் பகுதியை சேர்ந்த குமார் மகன் புரட்சித் தமிழன் என்பவர் மாலதியை அழைத்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையில் புரட்சித்தமிழன் நண்பர் என்ஜினீயரிங் படித்து வரும் ராம் பிரபு என்பவர் தனக்கு 10 லட்சம் தந்தால் புரட்சித் தமிழன், மாலதி இருக்கும் இடத்தை கூறுவேன் என மாலதியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர்கள் உமராபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அறிவுரையின் படி ராம்பிரபுவை ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு ராம்பிரபு வந்த பின் பெண்ணின் பெற்றோர் அவனிடம் சென்று வெற்று பேப்பர்கள் அடங்கிய கட்டை கொடுத்தனர்.
அப்போது மறைந்திருந்த போலீசார் ராம்பிரபுவை கையும் களவுமாக பிடித்தனர். காதல் ஜோடி பற்றி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating