கிரீடத்தை திருடிச் சென்றதாக மியான்மர் முன்னாள் அழகி மீது புகார்!!
கடந்த அரை நூற்றாண்டு காலமாக ராணுவ ஆட்சி நடைபெற்றுவந்த மியான்மரில் இருந்து, 2012ஆம் ஆண்டு முதல்தான் சர்வதேச அழகிப் போட்டிக்கு போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு இந்த ஆண்டு சியோலில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கு பெற்ற 18 வயதான மே மியாட் நோ என்ற மியான்மர் அழகி ‘மிஸ் ஏசியா பசிபிக்-2014’ பட்டம் வென்றார்.
ஆனால், தொடக்கத்திலிருந்தே இவருடைய நடவடிக்கைகள் ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தது என்று சியோலைச் சேர்ந்த அழகிப் போட்டி ஊடக நிர்வாகியான டேவிட் கிம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டேவிட் கிம் மேலும் கூறியதாவது:-
மியாட்டின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கான விளம்பர நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டபோதிலும் 5அடி 7அங்குலம் இருந்த இவரது தோற்றத்தில் மாற்றம் தேவை என்று அமைப்பாளர்கள் கருதியதால் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
பத்து நாட்கள் சியோலில் தங்குவதாக அவரது தாயையும் அழைத்துவந்த மியாட், மூன்று மாதங்களுக்கும் மேல் அங்கு தனது பயணத்திட்டத்தை நீட்டித்தது அமைப்பாளர்களுக்கான செலவினங்களை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தொடக்கத்திலிருந்தே இவர் அழகிப் போட்டி அமைப்பு, தேசிய இயக்குனர், மேலாளர், ஊடகம் மற்றும் இவரைத் தேர்வு செய்த ரசிகர்கள் என யாருக்கும் மதிப்பு கொடுக்கவில்லை. பொய் கூறினார்.
இதனால் இந்த வார ஆரம்பத்தில் அவரது பட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அவருக்கான விமான டிக்கெட்டும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குமுன்னரே அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். தன்னுடன் ஒன்று முதல் இரண்டு லட்சம் டாலர் மதிப்புள்ள கிரீடத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். அழகி என்ற தகுதியிலிருந்து மியாட் நீக்கப்பட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அவர் வெற்றியாளர் என்ற நினைப்புடன் கிரீடத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மியாட்டுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது பலன் கிடைக்கவில்லை என்றபோதும் யாங்கூன் திரும்பியதும் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுவார் என்று மியான்மர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Average Rating