விமானத்தில் போதை தலைக்கேறியதில் ரகளை செய்த பெண்கள்!!
கனடா நாட்டின் பயணிகள் விமானத்தில், இரண்டு பெண்கள், அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி ரகளையில் ஈடுபட்டதால், போர் விமானங்கள் இரண்டு, அந்த பயணிகள் விமானத்தை தரையிறக்கின.
ரகளையில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கனடாவின் டொரன்டோ நகரிலிருந்து கியூபாவுக்கு புறப்பட்ட விமானத்தில், கியூபாவைச் சேர்ந்த இரு பெண்கள் ஏறினர்.
இவர்கள் டொரன்டோ விமான நிலையத்தில் உள்ள வரியில்லாத மதுபான விற்பனையகத்தில், ஏராளமான மதுவை அருந்தியிருந்தனர்.
விமானம் கியூபாவுக்கு பறந்து கொண்டிருந்த போது, தள்ளாடிய படி விமானத்தின் கழிவறைக்கு சென்ற இருவரும், சிகரெட்டை பற்ற வைத்தனர்.
புகை வெளியேறியதை அடுத்து, தீ எச்சரிக்கை கருவி அலறியது. விமான நிலையப் பணியாளர், அந்த இரு பெண்களையும் கண்டித்த போது, அவர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
விமானத்தை தகர்த்து விடுவதாகவும் மிரட்டினர். இந்த தகவல், வட அமெரிக்க விமான பாதுகாப்பு அமைப்புக்கு தெரிய வந்தது. அதையடுத்து, இரண்டு, ´எப் 18 போர் விமானங்கள், கனடா பயணிகள் விமானத்தை நெருங்கி, பக்கவாட்டில் சென்று, டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறக்கியது.
என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல், வெறியாட்டம் ஆடிய இரு பெண்களும், பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர். பிற பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
Average Rating