அசோக்நகரில் கோலம்போட்ட பெண்ணிடம் தாலியை பறித்த திருடன்: போராடியதால் பாதி செயின் தப்பியது!!
அசோக்நகர் எல்.ஜி.ஜி.எஸ். காலனி 5–வது அவென்யூ 26–வது தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமி (58).
இன்று அதிகாலை 5.40 மணியளவில் லட்சுமி தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது.
திடீரென்று தெரு விளக்குகள் அணைந்தது. அதை பயன்படுத்தி கொள்ளையன் ஒருவன் லட்சுமியை பிடித்து கீழே தள்ளி அவரது கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்துள்ளான்.
அதிர்ச்சி அடைந்த லட்சுமி மாங்கல்யத்தை கெட்டியாக பிடித்து கொண்டு அவனுடன் போராடினார். அவனும் விடாமல் வேகமாக இழுத்தான். இதில் சங்கிலி பாதி அறுந்து கொள்ளையன் கையில் சிக்கியது.
கொள்ளையனுடன் போராடிய லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து ஓடிவந்தனர்.
பொதுமக்கள் திரண்டதை பார்த்ததும் கொள்ளையன் ஓட்டம் பிடித்தான். பொதுமக்களும் விடாமல் துரத்தி சென்றார்கள். ஆனால் தெருமுனையில் மோட்டார் சைக்கிளை தயாராக நிறுத்தி வைத்திருந்த கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான்.
சென்னையில் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆழ்வார் திருநகர், மேட்டுக்குப்பம் பகுதிகளில் தினமும் ஒன்றிரண்டு செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
ஒரு சவரன், இரண்டு சவரன் நகைகளை பறிகொடுக்கும் பெண்கள் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க செல்லவும் தயங்குகிறார்கள்.
திருடர்கள் சர்வ சாதாரணமாக தெருக்களில் வலம் வந்து நோட்டம் போடுகிறார்கள். போலீசார் நடவடிக்கை குறைவே இதற்கு காரணம் என்கிறார்கள்.
போலீசார் வாகனங்களில் ரோந்து செல்லும் ‘சைரன்’ ஒலி கேட்பதை எச்சரிக்கை மணியாக நினைத்து திருடர்களும் மறைந்து கொள்கிறார்கள். போலீசார் கடந்த சென்றதும் கைவரிசை காட்டுகிறார்கள்.
போலீசார் ரோந்து செல்லும்போது சந்தேக நபர்களை விரட்டியடித்தாலே திருடர்களுக்கு பயம் வரும். ஆனால் போலீசார் பெயரளவில்தான் சுற்றி வருவதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
Average Rating