அம்பை அருகே குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலை!!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள ஊர்க்காட்டை சேர்ந்தவர் முப்பிலிபாண்டியன். இவரது மனைவி கமலி(வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. 12 வயதில் சிவா , 8 வயதில் ஹரிசுதன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சிவா அம்பையில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். ஹர்சுதன் ஊர்க்காடு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் முப்பிலிபாண்டியன் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றிவந்தார். பல இடங்களில் கடனும் வாங்கியிருந்தார். திருமணத்தின்போது கமலிக்கு சீதனமாக அவரது பெற்றோர் வயல்காடு வழங்கியிருந்தனர். கடன் தொல்லை காரணமாக சொத்துக்களை விற்று கடன்களை அடைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக கணவன்– மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டானது. இதை தொடர்ந்து முப்பிலிபாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கமலி வேதனையில் இருந்தார். மேலும் குழந்தைகளை படிக்க வைக்கவும், குடும்பம் நடத்தவும் சிரமப்பட்டார். வாழ்க்கையில் வெறுப்படைந்த கமலி நேற்று இரவு தனது 2 குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரைகளை கொடுத்தார். பின்பு அவரும் மாத்திரை சாப்பிட்டார். மயங்கி கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் சிறுவன் ஹரிசுதன் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அம்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating