திருச்செந்தூர் அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்த இளம்பெண் சாவு!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளாளன்விளையை சேர்ந்தவர் சகாயமோசஸ், தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி செல்வி (வயது 30). இவர்களுக்கு ஷெர்லின்(7) என்ற மகனும், ஜெலின்(4) என்ற மகளும் உள்ளனர்.
நேற்றிரவு வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் செல்வி அவரது குழந்தைகள் மீதும், தன்மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் 3 பேரும் உடலில் தீப்பற்றிய நிலையில் வீட்டிற்குள் அங்கும் இங்கும் ஓடினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் 3 பேரின் உடலில் பற்றியை தீயை அணைத்தனர். இருப்பினும் செல்வி முற்றிலும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடல் கருகிய நிலையில் போராடிய குழந்தைகள் ஷெர்லின், ஜெலினை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செல்வி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகள் மீது தீ வைத்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக செல்வியின் கணவர் சகாயமோசசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating