மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் அடித்துக் கொலை: மகன் வெறிச்செயல்!!
புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் குணசீலன் (வயது 30). கட்டிட தொழிலாளியான இவர் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மதுகுடித்தே செலவழித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு குணசீலன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் மதுகுடிக்க தனது தாய் தனலட்சுமியிடம் (52) பணம் கேட்டார். அப்போது ஏற்கனவே மது குடித்துள்ளாய், எனவே மீண்டும் மதுகுடிக்க வேண்டாம் என்று தனலட்சுமி அறிவுரை கூறி உள்ளார். எனினும் தொடர்ந்து பணம் கேட்டு குணசீலன் நச்சரித்துள்ளார். ஆனால் தனலட்சுமி பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குணசீலன் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். இதனை பார்த்ததும் குணசீலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தனலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட குணசீலனை தேடி வருகிறார்கள்.
குடிபோதையில் தாயை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating