முதல் திருமணத்தை மறைத்து மோசடி: ரூ.25 லட்சம் கேட்டு மனைவி மிரட்டுவதாக என்ஜினீயர் புகார்!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அஸ்வின் ஸ்ரீராம் (வயது28), புனேயில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது மகள் என்ஜினீயர் லோகா (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்து புனேயில் கணவருடன் 3 மாதம் வாழ்க்கை நடத்திய லோகா அவருடன் வாழப் பிடிக்காமல் மகாராஜபுரம் வந்து விட்டார்.
கணவர் அஸ்வின் ஸ்ரீராம் மனைவியை சமாதானம் செய்து வாழ அழைத்தபோது, ரூ.25 லட்சம் பணம் கொடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கணவரின் பூர்வீக வீட்டை தனது பெயருக்கு மாற்றி கொடுத்தால் மட்டும் வாழ வரமுடியும் என லோகா கூறியதாக தெரிகிறது.
இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லோகா கொடுத்த புகாரில், திருமணத்தின்போது தனக்கு சீதனமாக கொடுத்த 150 பவுன் நகையில் 40 பவுன் நகையை கணவர் வீட்டார் அடமானம் வைத்து விட்டு, சாப்பாடு போடாமல் தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் செய்து வழக்கு பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் தனது மனைவி லோகாவிற்கும், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் போஸ் என்பவரது மகன் கிருஷ்ணசங்கர் என்பவருக்கும் 2007–ல் ஏற்கனவே திருமணமாகி சென்னை சென்ட்ரல் ஜாயிண்ட் சப்ரிஜிஸ்டர் ஆபீசில் பதிவாகி இருப்பது உறவினர்கள் மூலம் தெரியவந்ததும் அஸ்வின் ஸ்ரீராம் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் இதுகுறித்து லோகாவிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது லோகாவும், அவரது தாயார் சீதாலட்சுமி, சீதாலட்சுமியின் தந்தை ஜெயகுமார் ஆகியோர் ரூ.25 லட்சம் பணமும், பூர்வீக வீடும் வேண்டும். இல்லை எனில் விடமாட்டோம் என தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அஸ்வின் ஸ்ரீராம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து லோகாவின் அம்மா சீதாலட்சுமி, தாத்தா ஜெயகுமார், லோகாவின் சகோதரி கவுசிகா ஆகியோரை தேடி வருகின்றனர்.
Average Rating