வீடு புகுந்து திருட முயன்ற பீகார் வாலிபர் அடித்துக் கொலை!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பில்லூர் மேற்கு புதூரில் வசித்து வருபர் கந்தசாமி (வயது 57). விவசாயி. இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வீட்டின் கதவை தாழ்பாள் போடாமல் சாத்தி வைத்திருந்தார். மேலும் கதவை யாரும் திறந்துவிடாமல் இருக்கும் வகையில் கதவையொட்டி கட்டிலையும் சாத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் சுமார் நள்ளிரவு 1 மணியளவில் சுமார் 29 வயது மதிக்கதக்க திருடன் கந்தசாமி வீட்டில் சாத்தி இருந்த கதவை மெல்ல திறந்து வீட்டுக்குள் புகுந்தான்.
அப்போது கதவையொட்டி வைக்கப்பட்டிருந்த கட்டில் நகர்ந்து சென்று தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமியின் குடும்பத்தினர் மீது பட்டது. உடனே அவர்கள் அனைவரும் கண் விழித்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த வாலிபர் வீட்டுக்குள் பதுங்கினார்.
சுதாரித்துக்கொண்ட கந்தசாமி வீட்டுக்குள் புகுந்த திருடன் தப்பி வெளியே சென்று விடாமல் இருக்கும் வகையில் வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும் தாழ்பாள்போட்டு பூட்டி விட்டு வெளியே சென்றார்.
பின்னர் ஊரில் உள்ள மக்களிடம் இதுபற்றி கூறினார். ஊர் மக்கள் திரண்டு கந்தசாமியின் வீட்டுக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த வாலிபரை படித்து வெளியே கொண்டு வந்தனர்.
இதையடுத்து வாலிபரை கட்டி வைத்து மரக்கட்டை, கற்கள் போன்றவற்றை கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து மயங்கினார். மேலும் அழுத நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டுகளை அவிழ்த்து மயங்கி விழுந்து கிடந்த வாலிபரை மீட்டு நாமக்கல் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலையில் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கந்தசாமியின் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் வடமாநில வாலிபரை கட்டி வைத்து அடித்து உதைப்பதற்கு காரணமாக இருந்த கந்தசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருடனை கட்டி வைத்து அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating