பள்ளிக்கு செல்லாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய மாணவன்!!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் புன்னையா. இவர் மனைவி மற்றும் பேரன் உதய்கிரண் (வயது14) ஆகியோருடன் மாமல்லபுரத்தை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
உதய்கிரண் கூத்தவாக்கம் தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை அவர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார்.
மதியம் புன்னையாவின் செல்போனுக்கு மர்ம நபர் பேசினார். அப்போது, ‘‘உனது பேரன் உதய்கிரணை கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.10 லட்சம் வாங்கி கொடு, இல்லையேல் பேரனை கொலை செய்து விடுவோம்’’ என்று கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புன்னையா கடத்தல் குறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் உதய்கிரண் மயிலாப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் பள்ளிக்கு செல்லாமல் இருக்க கடத்தல் நாடகமாடியதாக அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து புன்னையாவிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே மாணவன் 2 செல்போன் நம்பரில் இருந்து புன்னையாவுக்கு பேசி உள்ளான். அவனுக்கு செல்போன்கள் கிடைத்தது எப்படி? கடத்தல் நாடகத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating