இன்று திருமணம்: நேற்றிரவு போலீஸ்காரருடன் புதுப்பெண் ஓட்டம்!!
மணலி புதுநகரை அடுத்த நாபாளையத்தை சேர்ந்த சலவைத் தொழிலாளி மகள் சுகந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் மணலியில் போக்குவரத்து போலீசாக வேலை பார்க்கும் ஒருவருக்கும் காதல் இருந்தது.
போலீஸ்காரருக்கு ஏறகனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் வல்லூரில் உள்ளனர். எனினும் சுகந்தி போலீஸ்காரருடன் காதலை வளர்த்து வந்தார்.
இதற்கு சுகந்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சுகந்தி கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் சுகந்திக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் செய்து இன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் வீட்டிற்கு வந்தனர். இதனால் கல்யாண வீடே களை கட்டியது. திருமண சடங்குகளுக்காக நேற்று இரவு மணப்பெண் சுகந்தியை அலங்காரம் செய்து உறவினர்கள் ஆனந்தம் அடைந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென சுகந்தி மாயமானார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
விசாரணையில் சுகந்தி, காதலன் போலீஸ்காரருடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர் மணலி புதுநகர் போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையே இன்று காலை மணப்பெண் ஓட்டம் குறித்து மணமகனின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமண வீடே சோகமானது.
இன்று காலை திடீரென சுகந்தி மீண்டும் வீட்டுக்கு வந்தார். அவரிடம் உறவினர்கள் சமாதானம் பேசியும் ஏற்கவில்லை. போலீஸ்காரரை திருமணம் செய்வதில் பிடிவாதமாக இருந்தார்.
நள்ளிரவில் போலீஸ்காரருக்கு போன் செய்த சுகந்தி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டி உள்ளார். இதனால் அவர் சுகந்தியை அழைத்து ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பது தெரிந்ததும் சமாதானம் பேசி சுகந்தியை வீட்டிற்கு போலீஸ்காரர் அனுப்பி வைத்து உள்ளார்.
மணலி புதுநகர் போலீஸ் நிலையத்தில் சுகந்திக்கு போலீசார் அறிவுரை கூறி வருகிறார்கள். ஆனால் அவர் காதலன் போலீஸ்காரரையே திருமணம் செய்வதாக கூறி வருகிறார்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவிப்போடு அங்கு காத்து நிற்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
போலீஸ்காரர் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating