21 ஆயிரம் முறை போனில் தொடர்புகொண்டு முன்னாள் காதலியை டார்ச்சர் செய்த பிரெஞ்சு காதலன்!!
தெற்கு பிரான்சின் ரோன் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவனின் காதலி கடந்த 2011ஆம் ஆண்டில் அவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவன் சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றான்.
காதலர்கள் இருவரும் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் இந்த இளைஞன் ஒரு குடியிருப்பு வீடு ஒன்றினை வாங்கி அதில் பல செலவுகளையும் மேற்கொண்டிருந்தான். இதற்கு செலவு செய்த தொகையை அவள் தனக்குத் திருப்பித் தரவேண்டும் அல்லது தனக்கு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று அந்த இளைஞன் எண்ணினான். இதனைத் தொடர்ந்து கடந்த பத்து மாதங்களாக அவளுக்கு தினமும் போன்மூலம் தொடர்பு கொண்டும், எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பியும் தொந்தரவு கொடுத்து வந்தான்.
தினசரி குறைந்தது 73 முறையாவது அவளை தொடர்பு கொண்டவிதத்தில் கடந்த பத்து மாதங்களில் மட்டும் 21,807 முறை அவளைத் தொடர்பு கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவனது தொல்லை தாங்கமுடியாமல் அந்தப் பெண் தனது போனின் தொடர்பை துண்டித்தபோதும் அவளது பணியிடத்திற்கும், பெற்றோருக்கும் அவன் போன் செய்யத் தொடங்கினான்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் இவனைக் கைது செய்த காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த இளைஞனுக்கு பத்து மாத சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்தத் தண்டனைக் காலத்தில் ஆறு மாதங்கள் குறைக்கப்பட்டு 1000 யூரோ அபராதம் விதிக்கப்பட்ட அந்த இளைஞன் நேற்று சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான்.
அத்துடன் அவன் மனநல சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும் என்றும் அந்த பெண்ணைத் தொடர்பு கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வக்கீல்கள் குறிப்பிட்டனர்.
இவர்களிடையே ஒரு மத்தியஸ்தர் ஏற்பாடு செய்த சந்திப்பில் அந்தப் பெண் தனக்கு நன்றி தெரிவித்தபின்னர் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும், தான் செய்தது முட்டாள்தனம் என்றும் அந்த இளைஞன் விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான்.
Average Rating