காதல் கணவர் மீது இரண்டு மனைவிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கபந்து வீதி நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 31).
இவர் கடந்த 2007–ம் ஆண்டு சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்த போது தனலட்சுமி (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாதனா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் செல்வராஜ் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டார். அங்கு லாவண்யா என்ற விதவை பெண்ணை காதலித்து அவருடன் வாழ்க்கை நடத்தினார். இதனால் தனலட்சுமியை வீட்டை விட்டு துரத்தினார். கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தனலட்சுமி சூரமங்கலம் மற்றும் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தார்.
போலீசார் அழைத்து விசாரித்த போது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக செல்வராஜ் எழுதி கொடுத்தார். இதனால் வழக்கு எதுவும் போடாமல் செல்வராஜூடன் தனலட்சுமியை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று தனலட்சுமி மீண்டும் போலீசிடம் கணவர் மீது புகார் கூறினார். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்த தனலட்சுமி தன்னுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறி அழைத்து சென்ற தனது கணவர் மற்றும் மாமனார்–மாமியார் ஆகியோர் தன்னை துரத்தி விட்டதாக கூறி இருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செல்வராஜூடன் சேர்ந்து வாழ்ந்த லாவண்யாவும் இன்று காலை கமிஷனர் அமல்ராஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
எனது கணவர் விபத்தில் இறந்ததற்காக வந்த பணம் ரூ. 8 லட்சத்தையும், 33 பவுன் நகைகளையும் என்னுடன் வாழ்ந்த எனது இரண்டாவது கணவர் செல்வராஜ் என்னிடம் வாங்கி ஏமாற்றி விட்டார். அந்த பணம் நகைகளை வாங்கித் தரவேண்டும். அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் மனு குறித்தும் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
ஒரு கணவருக்கு இரண்டு பெண்கள் சொந்தம் கொண்டாடி வருவது புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.
Average Rating