மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருச்சி அதிகாரி: போலீசில் புகார்!!
திருச்சி மாவட்டம் குழு மணி, லால்குடி, குண்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவிகள், நிர்மலா, லட்சுமி, ராஜேஸ்வரி(3 பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). 19 வயதான இவர்கள் 3 பேரும் வேளாங்கண்ணியில் உள்ள கருணை இல்லத்தில் தங்கி படித்து வருகிறார்கள்.
இவர்கள் 3 பேருக்கும் காது கேட்காது, வாய் பேச முடியாது. இவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான காது கேட்கும் கருவி, பொருத்த விண்ணப்பிக்கப்பட்டது.
தங்களுக்கு மாற்றுத்திறனாளிகான உபகரணம் வழங்க கோரி திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் உள்ள அலுவலரை 3 மாணவிகளும் சந்தித்தனர்.
அப்போது அங்கிருந்த அலுவலர் செல்லம் என்பவர் 3 மாணவிகளையும் பரிசோதனை செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் காது கேட்காத, வாய் பேச முடியாத 3 மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை 3 மணிக்கு நடந்துள்ளது.
தங்களுக்கு நடந்ததை 3 பேரும் செய்கையால் பேசி பகிர்ந்து கொண்டனர். பிறகு இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கண்ணீருடன் செய்கையால் விளக்கி கூறினர். இதை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க தலைவர் ரமேஷ் பாபு, செயலாளர் சிவக்குமார், துணை தலைவர் கோவிந்தராஜு ஆகியோரிடம் கூறினர். இந்த தகவல் திருச்சி மாவட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு தெரிய வந்தது.
இன்று காலை பாதிக்கப்பட்ட 3 மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள், திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
3 மாணவிகளையும் பாலியல் தொந்தரவு செய்த அலுவலர் செல்லம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறி இருந்தனர். இதுகுறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லீலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காது கேட்காத, வாய் பேச முடியாத 3 மாணவிகளை அரசு அலுவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating