பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் சிக்கினான்!!
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை பேசிய மர்ம நபர் விருகம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி, வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஷ்வரா பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தான்.
போலீசார் 2 பள்ளிகளிலும் மாணவர்களை வெளியேற்றி சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. புரளி என்பது தெரிந்தது.
மர்ம நபர் பேசிய செல் போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அது ஜெ.ஜெ.நகர் கலைவானர் காலனியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது. அவரிடம் விசாரித்த போது குறிப்பிட்ட செல்போன் 3 மாதத்துக்கு முன்பே தொலைந்து விட்டதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து செல்போன் பேசப்பட்ட இடத்தை செல்போன் டவர் மூலம் போலீசார் துப்பு துலக்கினர். அப்போது செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் எம்.ஜி.ஆர். நகர் சங்கரலிங்கம் தெருவை சேர்ந்த மாணவர் 2 பள்ளிகளுக்கும் வெடி குண்டு மிரட்டல் விடுத்து பேசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
படிப்பில் சுமாரான மாணவரான அவனிடம் அடிக்கடி பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் ரோட்டில் கீழே கிடந்த செல்போனை எடுத்த அவர் 2 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசி இருப்பது தெரிய வந்தது.
மாணவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவருக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Average Rating